திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பட்சி தீர்த்தம், வேதமலை என்றழைக்கப்படும் வேதகிரீஸ்வரர் கோயில் உள்ளது. சிவத்தலங்களில் முக்கிய தலமாக, இக்கோயில் விளங்குவதால் வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வேதகிரீஸ்வரரை வணங்கி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11 நாள் சித்திரை திருவிழா மிக விமர்சையாக நடப்பது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக, சித்திரை திருவிழா நடக்கவில்லை. இந்நிலையில், இந்தாண்டு சித்திரை திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, 11 நாள் திருவிழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மீது ‘ஓம் நமச்சிவாய’ என்ற கோஷம் முழங்க அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து விழாவின் 3ம் நாளான நாளை (சனிக்கிழமை) அறுபத்து மூவர் உற்சவமும், 7ம் நாள் பெரிய தேர் உற்சவம் 11ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.